Tuesday, January 26, 2010

பயணத்தின் போது கட்டுக் கட்டாக பணத்தை கொண்டு செல்லலாமா? ஐதராபாத் நபர் சந்தித்த துயரமும், சோதனையும்


புதுடில்லி : வழக்கு ஒன்றில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பால், பயணத்தின் போது பெரிய அளவிலான பணம், தங்கம், நகைகள் மற்றும் இதர மதிப்புமிக்க பொருட்களை கொண்டு செல்வோர், பல விதமான இன்னல்கள் மற்றும் துயரங்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னையில் சொத்து வாங்க திட்டமிட்டார். இதற்காக, தன் வங்கிக் கணக்கில் இருந்து 65 லட்சம் பணத்தை எடுத்தார். அதை ஒரு பையில் வைத்துக் கொண்டு ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். ஐதராபாத் விமான நிலையத்தில், அவரை அதிகாரிகள் பரிசோதித்த போது, அவர் தன்னிடம் 65 லட்ச ரூபாய் பணம் இருப்பதாகவும், நிலம் வாங்குவதற்காக சென்னைக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். அதை, ஐதராபாத் விமான நிலைய அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். அவரை சென்னை செல்ல அனுமதித்தனர். ஆனால், சென்னை வந்த அவருக்கு, துயரம் காத்திருந்தது. அவர் கொண்டு வந்த 65 லட்ச ரூபாய் பணம் தொடர்பாக, வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவினரும், போலீஸ் அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினர். அவரை வெளியே செல்லவிடாமல் விமான நிலையத்திலேயே பிடித்து வைத்தனர். விசாரணையின் போது, தன் கணக்கில் இருந்து பணத்தை எடுத்ததற்கான சான்றிதழையும், அந்தப் பணம் தன்னால், சட்டப்பூர்வமாக சம்பாதிக்கப்பட்டது என்பதையும், தன் வருமானத்திற்கு உரிய கணக்குகள் இருப்பதாகவும், வருமான வரித்துறையினரிடம் அவர் தெரிவித்தார்.
இருந்தாலும், சட்ட விரோதமாக அவர் பணத்தை கொண்டு வருவதாக சந்தேகப்பட்ட வருமான வரித்துறையினர், அவரிடம் இருந்து 65 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து கொண்டு, அதற்கு ரசீது அளித்தனர். இந்தப் பிரச்னை காரணமாக அந்த நபர், விமான நிலையத்தில் 15 மணி நேரத்திற்கு மேலாக பிடித்து வைக்கப்பட்டார். பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவரத்தை பத்திரிகைகளுக்கும் செய்தியாக வருமான வரித்துறையினர் கொடுத்தனர். இது தொடர்பாக இரண்டு மாதங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின், அவர் எந்த விதமான முறைகேடுகளும் செய்யவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து, பறிமுதல் செய்த பணத்தை வருமான வரித்துறையினர் அவரிடம் திருப்பிக் கொடுத்தனர். இரண்டு மாதம் பணத்தை வைத்திருந்ததற்கு எந்த விதமான வட்டியையும் தரவில்லை.
இதனால் எரிச்சல் அடைந்த அவர், ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி கோரியதோடு, இதுபோன்ற தர்மசங்கடமான சூழ்நிலைகள் பயணிகளுக்கு ஏற்படுவதைத் தவிர்க்க விதிமுறைகளை உருவாக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்றும், கோரிக்கை விடுத்தார். ஆனால், பணம் பறிமுதல் செய்யப்பட்ட இடம் சென்னை என்பதால், மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி, ஆந்திர ஐகோர்ட் அதை தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு விசாரணைக்கு வந்த போது, வருமான வரித்துறை சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கூறியதாவது: ஐதராபாத் மற்றும் சென்னை விமான நிலையங்களில் வருமான வரித்துறையின் உளவுப் பிரிவினர் நடத்திய விசாரணை மற்றும் நடவடிக்கைகளில், எந்த விதமான தவறும் இல்லை. அவர்கள் தங்களின் கடமையைத்தான் செய்துள்ளனர். அளவுக்கு அதிகமான பணத்தை, அந்த நபர் கொண்டு சென்றதால், சந்தேகம் ஏற்பட்டு விசாரணை நடந்துள்ளது. வங்கியில் இருந்து பெற்ற சான்றிதழை, அவர் சமர்ப்பித்தாலும், அதை சரிபார்க்க வேண்டிய கடமை வருமான வரித்துறைக்கு உள்ளது. அதனால், பயணியை விமான நிலையத்தில் பிடித்து வைத்ததிலும், அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்ததிலும் எந்தத் தவறும் இல்லை. அவர்கள் தங்களின் பணியை சரிவர செய்துள்ளனர். இவ்வாறு சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீலோ, "சட்டப்பூர்வமாக வங்கியில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பணத்தை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ய முடியாது. மேலும், பணத்தை கொண்டு சென்ற மனுதாரர், அதை சட்டப்பூர்வமான முறையில் சம்பாதித்துள்ளார். "பெரிய அளவிலான பணத்தை கொண்டு செல்லக்கூடாது என, எந்த சட்ட விதியும் இல்லை. மேலும், 15 மணி நேரத்திற்கு மேலாக, மனுதாரரை விமான நிலையத்தில் பிடித்து வைத்துள்ளனர். இது நியாயமல்ல' என்றார்.
தீர்ப்பு: இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: ஒருவர் குறிப்பிட்ட அளவுதான் பணத்தை கொண்டு செல்ல வேண்டும் என, எந்த விதமான சட்ட விதியும் இல்லை என்பது உண்மையே. இருந்தாலும், அவர் எந்த நோக்கத்திற்காக பணத்தை எடுத்துச் செல்கிறார் என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை, வருமான வரித்துறையினருக்கோ அல்லது மற்ற சட்ட அமலாக்க நிறுவனத்தினருக்கோ உண்டு. ஒருவர் சட்டப்பூர்வமாக சம்பாதித்த பணம், வங்கியில் இருந்து எடுக்கப்பட்டாலும், அதை சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. குற்ற நடவடிக்கைகளுக்கோ அல்லது பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கவோ பயன்படுத்தலாம். அதை யாரும் மறுக்க முடியாது. மேலும், சம்பந்தப்பட்ட நபர், 65 லட்ச ரூபாய் பணத்தை சொத்து வாங்குவதற்காக கொண்டு சென்றுள்ளார். இருந்தாலும், இந்த ரூபாய்க்கு சொத்து வாங்கும் போது, முத்திரைத் தாள் கட்டணம், பதிவுக் கட்டணம், மூலதன ஆதாய வரி போன்றவற்றை செலுத்தாத வகையில், சொத்து வாங்க வாய்ப்பு உள்ளது.
சொத்தை விற்பவருக்கு கணிசமான தொகையை கருப்புப் பணமாகவும் இவர் கொடுக்கலாம். அதனால், பெரிய அளவிலான பணத்தை ஒருவர் கொண்டு செல்லும் போது, அது சட்டப்பூர்வமான பணமா, அது நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை, உளவுத் துறை அதிகாரிகளுக்கு உள்ளது. குற்றங்களையும், தவறுகளையும் தடுக்க அவர்கள் இதைச் செய்ய வேண்டியது அவசியம். பணத்தை பறிமுதல் செய்து வைத்து, அதன்பின் விசாரணை நடத்துவதன் மூலம், அந்தப் பணம் நல்ல நோக்கத்திற்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் உறுதி செய்ய முடியும். ஆகையால், இதுபோன்ற விவகாரங்களில் பணத்தை கொண்டு செல்பவருக்கு ஏற்படும் சிரமங்களையும், சவுகர்யக் குறைவையும் பெரிதாக கருதக் கூடாது. அது தவிர்க்க முடியாத ஒன்றே. அந்த பணத்தை கொண்டு செல்பவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்கின்றனர் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இருந்தாலும், விசாரணை முழுமையாக முடியாத நிலையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, பத்திரிகைகளுக்கு வருமான வரித்துறையினர் தகவல் கொடுத்தது சரியல்ல. அது தவறான நடைமுறை. இதுபோன்ற தவறுகள், எதிர்காலத்தில் நடக்காமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், இதுபோன்ற விவகாரங்களில், பயணிகளுக்கு அதிக அளவில் சிரமம் கொடுக்காமல், அவர்களை இம்சைப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தக்க வழிகாட்டிக் குறிப்புகளை வெளியிடும்படி, வருமான வரித்துறையினரை சொலிசிட்டர் ஜெனரல் கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர். இதையடுத்து, வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு மத்திய நேர்முக வரிகள் வாரியம், 2009 நவம்பர் 18ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
* ஒருவர் பெரிய அளவிலான பணமோ அல்லது நகையோ கொண்டு செல்வதாக தெரியவந்தால், அதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தலாம். அந்த சோதனையையும் விமானம் புறப்படுவதற்கு முன்னதாக முடிக்க வேண்டும். விமானம் புறப்படுவதற்குள் முடிக்க முடியவில்லை எனில், குறிப்பிட்ட தகவலை, சம்பந்தப்பட்ட பயணி செல்லும் இடத்தில் உள்ள விசாரணை அதிகாரிகளுக்கு தெரிவித்து விட வேண்டும். பயணி சென்றடையும் இடத்தில் உள்ள அதிகாரிகள், அவரிடம் தேவையான விசாரணையை நடத்திக் கொள்வர்.
* விசாரணையின் போது போதிய விவரங்கள் கிடைத்தால், அவர் கொண்டு செல்வது கருப்புப் பணம் அல்லது தவறான நோக்கத்திற்கானது என தெரியவந்தால், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்யலாம்.
* அதேநேரத்தில், சம்பந்தப்பட்ட பயணியின் வாக்குமூலத்தை, அவருக்கு தெரிந்த மொழியில் பதிவு செய்ய வேண்டும். அந்த வாக்குமூலத்தில் அவர் கையெழுத்திடும்முன், அதில் எழுதியுள்ள விவரங்களை அவரிடம் வாசித்துக் காண்பிக்க வேண்டும்.
*அவர் சொல்லியதற்கு மாறான தகவல்கள், வாக்குமூல அறிக்கையில் இடம் பெற்றிருந்தால், அதைத் திருத்திக் கொள்ளவும், திருத்திய அறிக்கையில் அவர் கையெழுத்திடவும் வாய்ப்பு அளிக்க வேண்டும். "நான் சொல்வது எல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறில்லை' என்ற உறுதி மொழியை, சம்பந்தப்பட்ட பயணி தெரிவித்த பின்னரே, அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்.
* விசாரணையையும், அதைத் தொடர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளையும் விரைவாக எடுக்க வேண்டும். பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்டது நகைகள் அல்லது மதிப்புமிக்க பொருட்கள் எனில், அவற்றை மதிப்பிட, தகுதியான நபரை அழைத்து உடனடியாக மதிப்பிட்டு, அதன் மதிப்பை குறிப்பிட வேண்டும்.
* விசாரணை நடத்தும் போது, சம்பந்தப்பட்ட பயணிக்கு குடி தண்ணீர், உணவு, டீ மற்றும் நொறுக்குத் தீனிகள் வழங்க வேண்டும். தேவைப்பட்டால், மருத்துவ உதவியும் அளிக்கலாம்.
* விசாரணை நடவடிக்கைகள் முடிந்த பின்னர், குறிப்பிட்ட அந்தப் பயணியை, அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு, அரசு வாகனத்தில் அனுப்ப வேண்டும்.
* விமான நிலையத்தில் நடைபெறும் விசாரணைகள் அனைத்தும் ரகசியமாக நடக்க வேண்டும். மீடியாக்களுக்கு செய்திகள் வெளியாவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாலும், ஐதராபாத் பயணிக்கு நேர்ந்த கொடுமைக்கு, வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரிகள் மன்னிப்புக் கேட்டதாலும், இந்த வழக்கை தள்ளுபடி செய்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இருந்தாலும், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவால், பயணங்களின் போது, பெரிய அளவிலான பணம், நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொண்டு செல்வோர், கடும் சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒருவர் நல்ல நோக்கத்திற்காக பெரிய அளவிலான பணத்தை கொண்டு சென்றாலும், விமான நிலையத்தில் மட்டுமின்றி, அதன்பின்னரும் விசாரணை நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் வரி ஏய்ப்புக்காகவோ அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளுக்காகவோ, பெரிய அளவிலான பணத்தை அல்லது நகைகளை கொண்டு சென்றால், அவரை அதிகாரிகள் பிடித்து விசாரிக்க முடியும். தவறு செய்திருந்தால் தண்டிக்க முடியும். வரி ஏய்ப்பு குற்றத்திற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

No comments: