ஆசிரியர் சொன்னதற்காக பள்ளி சென்றேன்: நரிக்குறவர் இனத்தில் இருந்து ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் ரஜினி: நான் மூன்றாம் வகுப்பு வரை, நண்பர்களுடன் சுத்துவதற்காக பள்ளிக்கூடம் போனேன். வாரத்திற்கு இரண்டு நாள் பள்ளிக்குப் போவதே பெரிய விஷயம். அப்படியும் நான், வகுப்பில் முதல் மாணவனாக வருவேன். அப்ப எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியை, "நீவகுப்பிற்கு வராமலேயே நல்லா படிக்கிற... தொடர்ந்து வந்து படிச்சன்னா, பெரிய ஆளா வரலாம்'ன்னு சொன்னாங்க. எதற்காக சொல்றாங்கன்னு தெரியாமல், ஆசிரியர் சொன்னதற்காக பள்ளிக்கு போக ஆரம்பிச்சேன்.நான்காம் வகுப்பு முதல், பத்தாவது வரை, ஒரு நாள் கூட வகுப்பை கட் அடிச்சதே இல்லை. அதே போல் ஏழு வருடங்களும், வகுப்பில் முதல் இடம் தான் பிடிச்சேன். பத்தாம் வகுப்பில், 470 மதிப்பெண்கள் பெற்றேன். கணக்கில் 100 சதவீத மதிப்பெண் பெற்றேன்.பத்தாம் வகுப்பு படிக்கும் வரை, என் வீட்டில் மின்சாரம் கிடையாது. தெரு விளக்குகள் கூட இல் லை. ஹரிகேன் விளக்குகளில் தான் படித்தேன். நான் மட்டும் படித்தால் போதாது, எல்லா மாணவர்களும் படிக்க வேண்டும் என்பதால், என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். பத்தாவது முடித்த போதே, 50 மாணவர்கள் கல்வி கற்க உதவினேன்.பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டின்னு, பள்ளியில் நிறைய போட்டிள் நடக்கும். அனைத்திலும் ஜெயித்தேன். அப்ப, ஒரு போட்டியில் என் பேச்சு பிடித்ததால், தனியார் அமைப்பைச் சேர்ந்த சந்திரசேகரன் சார், எனக்கு படிக்க உதவி செய்தார். அவரின் உதவியால், எனக்கு பத்திரிகைகளில் பாராட்டு கிடைத்தது. பின், கல்வி உதவிக்காக, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிடைத்தது.அப்ப, எனக்கு அவ்வளவு பணம் தேவைப்படாததால், என்னுடன் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், அந்த பணத்தை பிரிச்சு கொடுத்திட்டேன். படித்து முடித்த பின், இன்னும் நிறைய மாணவர்களுக்கு உதவணும்.
No comments:
Post a Comment