Thursday, November 12, 2009

பரீட்சைக்கு பயந்து ஆட்டோவில் கடத்தியதாக பள்ளி மாணவி நாடகம் போலீசார் மீட்டனர்

சூளைமேடு அன்னை சத்யாநகரில் வசித்து வருபவர் சுகன்யா (வயது 15). இவர் அரும்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளியில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கூடம் சென்ற சுகன்யா, மாலை 6 மணிக்கு தனது தாய்க்கு போன் செய்தார்.

காலையில் நான் பள்ளிக் கூடம் சென்றபோது என்னை யாரோ ஆட்டோவில் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று விட்டனர். இப்போதுதான் எனக்கு மயக்கம் தெளிந்துள்ளது. அண்ணாசாலையில் தேவி தியேட்டர் அருகில் இருந்து நான் பேசுகிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

இதுகுறித்து சூளைமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அண்ணாசாலைக்கு உடனடியாக போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் சுகன்யா அங்கு இல்லை. இதனால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே 1/2 மணி நேரம் கழித்து சுகன்யா மீண்டும் தனது தாய்க்கு போன் செய்தார். நான் தற்போது ஐஸ்அவுசில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் சுகன்யாவை மீட்டனர்.

பின்னர் சூளைமேடு போலீஸ் நிலையத்துக்கு அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சுகன்யாவை யாரும் கடத்தவில்லை என்பது தெரியவந்தது.
பரீட்சைக்கு பயந்து அவர் கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது. இதையடுத்து சுகன்யாவை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

No comments: