Wednesday, October 21, 2009

கல்வி கற்கும் வயதில் மது பாட்டில் விற்கும் அவலம்


பனமரத்துப்பட்டி : சேலம் மாவட்டம் மல்லூர் அருகே, கல்வி கற்க வேண்டிய சிறுவர்கள், மது பாட்டில் விற்கும் அவலம் நிலவுகிறது.சேலம் மாவட்டம் மல்லூர் அருகே, சந்தியூர் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் மாயன்(38); மனைவி ஜானகி. திருமணம் நடந்த சில ஆண்டுகளில், மாட்டு வண்டியில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில், மாயனின் வலது கால் துண்டானது.



இவர்களுக்கு அபிராமி(13), குணா(12), கமல்(7), சஞ்சய்(4), குரு(4), மயில்(2) ஆகிய ஆறு குழந்தைகள் உள்ளனர். தற்போது ஜானகி, எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.குடும்பம் நடத்த நிலையான வருமானமின்றி, ஆறு குழந்தைகளும், வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். வறுமையில் வாடும் குடும்பத்தைக் காப்பாற்ற, ஐந்தாம் வகுப்பு படித்த மூத்த மகள் அபிராமி, மூன்றாம் வகுப்பு படித்த மகன் குணாவும், டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கி, 10 ரூபாய் வீதம் கூடுதல் விலை வைத்து உள்ளூரில் விற்கின்றனர்.


அதன் மூலம் நாள் தோறும், 100 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.வறுமையில் இருக்கும் குடும்பத்தைக் காக்க கால் ஊனமுற்ற மாயன், உதவி கேட்டு அரசு அலுவலகங்களுக்கு பல ஆண்டுகளாக அலைந்தும், அரசு தரப்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை.


இதுகுறித்து மாயன் கூறியதாவது:கால் துண்டானதால், வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க முடியவில்லை. எங்களுக்கு மொத்தம் எட்டு குழந்தைகள் பிறந்தன. இரட்டையாக பிறந்த இரண்டு குழந்தைகளை, உறவினருக்கு தத்துக் கொடுத்து விட்டோம். உடல் ஊனமுற்றோர் உதவி கேட்டு 10 ஆண்டுகளாக போராடி வருகிறேன். இதுவரை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மது பாட்டில் வாங்கி விற்பதில் கிடைக்கும் பணத்தில், எங்களுக்கு அரை வயிறு சாப்பாடு கிடைக்கிறது.இவ்வாறு மாயன் கூறினார்.

Source: http://www.dinamalar.com

No comments: