Wednesday, November 18, 2009

நிர்வாணமாக்கி ஊர்வலம்: பள்ளி மாணவருக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு; ஆசிரியருக்கு கோர்ட்டு உத்தரவு


நிர்வாணமாக்கி ஊர்வலம்: பள்ளி மாணவருக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு; ஆசிரியருக்கு கோர்ட்டு உத்தரவு
டெல்லியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தவர் பி.சி. குப்தா (வயது 65). தற்போது ஓய்வு பெற்று உள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு அவர் பணி புரிந்தார்.

அப்போது, அப்பள்ளியில் படித்த ஒரு மாணவன் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் குளித்துவிட்டான். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த மாணவனை அடித்து உதைத்தார். மேலும் இரக்கமற்ற முறையில் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்தி கொடூரமாக நடந்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து மாணவர் கவுன்சில் சார்பில் டெல்லி மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் குப்தாவுக்கு ஒருவருட ஜெயில் தண்டனையும், 2,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதை எதிர்த்து டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. 12 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் பி.சி. குப்தா ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதி பிரதீபா ராணி உத்தரவிட்டார். மேலும், கீழ்க்கோர்ட்டு வழங்கிய தண்டனையை ரத்து செய்தார்.

கொடூர தண்டனை வழங்கிய ஆசிரியர் குப்தாவுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

No comments: