மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளன,’ என்று போக்குவரத்து ஆணையர் ராஜாராம் தெரிவித்தார். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப, விபத்துக்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக, பள்ளி வாகனங்களின் விபத்தும் ஆண்டுதோறும் அதிகரிப்பது கவலை தருவதாக இருக்கிறது. கடந்த ஜூன் 2ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆர்டிஓ மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மூலம் வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்படுகிறது. இருப்பினும், பள்ளி வாகனங்கள் என்ற பெயரில் இயக்கப்படும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் ஏற்றப்படுகின்றனர். பாதுகாப்பற்ற முறையில் இத்தகைய வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதனால், பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ராஜாராம் தலைமையில், பல்வேறு பள்ளி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை கருதி, பள்ளிகளுக்கு அரசு பஸ்களை தனியாக இயக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பள்ளியின் பெயர், ஆட்டோவில் பயணம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை, எந்த நேரங்களில் பஸ் இயக்குவது, எந்த வழித்தடத்தில் இயக்குவது போன்ற விபரங்களை அனுப்புமாறு, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, போக்குவரத்து ஆணையர் ராஜாராம் கூறுகையில், ÔÔபோக்குவரத்து விதிகளை மீறும் தகுதியற்ற ஓட்டுநர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வாகனங்களின் உரிமம் ரத்து மற்றும் சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு மாநகர பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விபரங்கள் கிடைத்தவுடன், எந்தெந்த பள்ளிகளுக்கு, எவ்வளவு பஸ்கள் இயக்குவது என்பது பற்றி முடிவு எடுக்கப்படும்ÕÕ என்றார்.
மாநகர போக்குவரத்துக் கழக உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், ÔÔஏற்கனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்காக முக்கியமான இடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து, பஸ் தேவைப்பட்டால் நாங்கள் இயக்க தயாராகவுள்ளோம்ÕÕ என்றார்



No comments:
Post a Comment